திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் வடிகால்கள், சாலை, மேம்பால பணிகளை முடிக்க வேண்டும்: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனைகள்:  

* 1843ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட “சுலோச்சன முதலியார் பாலம்” திறக்கப்பட்டு இன்று 179வது ஆண்டை கொண்டாடுகிறது. அந்த வகையில் நெடுஞ்சாலை துறை கட்டுமான பணிகள் உறுதி தன்மையுடனும், தரத்துடனும் இருக்க வேண்டும்.

* 1970ல் முசிறி - குளித்தலை இடையே கலைஞரால் கட்டப்பட்ட தந்தை பெரியார் பாலம் தான் தமிழகத்திலேயே நீளமான ஆற்றுப்பாலம்.  இதன் நீளம் 1,470 மீட்டர். இது இன்றும் உறுதிதன்மையுடன் உள்ளது.

* ஒரு சாலையை முழுமையான மேம்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும் பொழுது உரிய திட்டமிடுதல் வேண்டும்.

* திட்டமிடுதலில் புதுப்புது உக்திகள் கடைப்பிடித்து இலக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும்.

* உரிய காலக்கெடுவுக்குள் பணிகளை முடிப்பதற்கு தேவையான ஒருங்கிணைப்பு பணிகள், சாலை பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாய்கள், மின்சார வாரிய உபகரணங்கள் மாற்றியமைத்தல் மற்றும் மரங்களை அகற்றுதல் ஆகியவற்றை உரிய திட்டமிடுதலுடன் மேற்கொண்டு பணிகள் குறித்த காலத்திற்குள் முடிவடைய அனைத்து வித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* பெரிய பால பணிகள் நவீன உக்திகளை கடைப்பிடித்து கட்டுமானம் மேற்கொண்டால் குறுகிய காலத்தில் பணிகளை முடிக்கலாம்.

* ரயில்வே மேம்பால பணிகளில், ரயில்வே துறையுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* ஒருங்கிணைந்து பணியாற்றுதல் என்பது இரு துறைகளுக்கும் இடையில் கலந்தாலோசித்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

* நகர்ப்புற பகுதிகளில் வடிகால்கள் அமைக்கும் பொழுது முறையான வாட்டத்துடன் அமைக்கப்பட வேண்டும்.

* விதிமுறைகளின்படி முறையான தரக்கட்டுப்பாடு சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

* பணிகளை செயல்படுத்தும்போது, குறிப்பாக சாலையை அகலப்படுத்தும் பணிகள், சாலை மேம்பாடு, பாலங்கள் கட்டும் பணிகளில் உரிய பணியிட பாதுகாப்பு முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

* திட்டப்பணிகள் உடனடியாக திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்பட்டால்தான், அடுத்தடுத்த திட்டங்களை வகுக்கவும், அவற்றை செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும். இவ்வாறு ஆலோசனைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலை துறை அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன  திட்ட இயக்குநர் கணேசன், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குநர் ஸ்ரீதர், தலைமை பொறியாளர்கள், துறை சார்ந்த பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: