பெரம்பூர்: புளியந்தோப்பில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. புளியந்தோப்பு கன்னிகாபுரம் வாசுகி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் மாரி (எ) லொடாங்கு மாரி (40). இவர் மீது புளியந்தோப்பு பேசின்பிரிட்ஜ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவரை கடந்த நவம்பர் 20ம்தேதி இரவு 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. புளியந்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த மாரி (எ) கொருக்குப்பேட்டை மாரி (35), கார்த்திக் (எ) பிள்ளை கார்த்திக் (32), மார்ட்டின் (28), லட்சுமணன் (32), மாரிமுத்து (எ) கேப்மாரி (35) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.