ஆபாச ஆடியோ விவகாரம் சூர்யா சிவாவுக்கு அண்ணாமலை ஆதரவா? கட்சியை விட்டு நீக்காமல், பொறுப்பில் இருந்து மட்டும் நீக்குவதுதான் நடவடிக்கையா என பெண்கள் குமுறல்

சென்னை: ஆபாச ஆடியோ விவகாரத்தில் திருச்சி சூர்யா சிவாவுக்கு ஆதரவாக அண்ணாமலை இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளதால், பாஜகவில் உள்ள பெண்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பாஜகவில் மூத்த தலைவர்களை மாநில தலைவர் அண்ணாமலை ஓரங்கட்டுவதாகவும், மதிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஒன்றிய அமைச்சர் முருகன், எச்.ராஜா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களிடம் அவர் ஆலோசனை நடத்துவதில்லை. தான் ஒருவர் மட்டுமே கட்சியில் இருப்பதுபோன்ற நிலையை உருவாக்கி வருகிறார்.் தனக்கு மட்டுமே ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடுகிறது என்று நிரூபிப்பதற்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்தநிலையில் அண்ணாமலைக்கும், நடிகை காயத்ரி ரகுராமுக்கும் இடையே மோதல் எழுந்தது. காயத்ரியை மட்டும் தட்டி வைக்கும் வேலையில் அண்ணாமலை இறங்கினார். இதனால் அவர் பொங்கி எழுந்து, இணைய தளங்களில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி வந்தார். இந்தநிலையில் இரு நாட்களுக்கு முன்னர் காயத்ரி ரகுராமை மட்டும் கட்சியில் இருந்து அண்ணாமலை அதிரடியாக நீக்கினார். அதேநாளில்தான் திருச்சி சூர்யா சிவாவுக்கும், சிறுபான்மையினர் மாநில நிர்வாகி டெய்சி சரணுக்கும் இடையே நடந்த ஆபாச உரையாடல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியதால், டெல்லி தலைமையும் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டது. இதனால், நேற்று இருவரிடமும் விசாரணை நடந்தது. விசாரணையில் டெய்சியை ஆபாசமாக பேசியதும், வெட்டி மெரினாவில் வீசுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததையும் ஒப்புக் கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து மாலையில் சூர்யா சிவாவின் கட்சிப் பொறுப்புகளை பறித்து அண்ணாமலை உத்தரவிட்டார். ஆனால் கட்சியை விட்டு நீக்கவில்லை. காயத்ரியை கட்சியை விட்டு நீக்கிய அண்ணாமலை, சூர்யா சிவாவை நீக்காமல் இருந்தது ஏன் என தற்போது பாஜகவில் உள்ள பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காயத்ரிக்கு ஒரு நீதி, சூர்யா சிவாவுக்கு ஒரு நீதியா? மேலும், அண்ணாமலை சொல்லித்தான் டெய்சியை சூர்யா திட்டுவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தனக்கு எதிராக செயல்படுவதாக கருதுகிறவர்களை எல்லாம் அவர் இதுபோன்று மிரட்டலில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் சூர்யா மிரட்டும்போது மோடிட்ட போறீயா, அமித்ஷா, நட்டாவிடம் போறீயா? எங்க வேணும்னாலும்போ என்று மிரட்டுவார். அண்ணாமலையை மட்டும் கூற மாட்டார். ஏனெனில் அண்ணாமலை சொல்லித்தான் இந்த மிரட்டலில் அவர் ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. இதனால்தான் அவரை கட்சியை விட்டு நீக்காமல், பொறுப்புகளை மட்டுமே பறித்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பாஜக மகளிர் அணியினர் மத்தியில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Related Stories: