ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாமிற்கான விழிப்புணர்வு வாகனத்தினை தொடங்கி வைத்தார் மேயர் பிரியா

சென்ன: சென்னை மாநகராட்சியின் சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாமிற்கான விழிப்புணர்வு வாகனத்தினை மேயர் ஆர்.பிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 28.11.2022 முதல் 04.12.2022 வரை நடைபெற உள்ள ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாமிற்கான விழிப்புணர்வு வாகனத்தினை மேயர் ஆர்.பிரியா ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம்கள் 28.11.2022 முதல் 04.12.2022 வரை கீழ்காணும் 5 நகர்ப்புற சமுதாய மையங்களில் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 வரை நடைபெற உள்ளது.

தேசிய குடும்ப நலத்திட்டத்தில் ஆண்களின் பங்கு அரிதாக இருக்கிறது. மனைவியின் நலத்தைக் காக்க ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனால், இந்தக் கருத்தடை சிறப்பு முகாமில் ஆண்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை முகாம்களில், கத்தி உபயோகப்படுத்தாமலும் தையல், தழும்பு இல்லாமல் புதிய எளிய முறையில் செய்யப்படுவதால் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமின்றி, சிகிச்சை முடிந்த ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு செல்லலாம் என்பதால், இந்த எளிமையான கருத்தடை சிகிச்சை முறையில் தகுதி வாய்ந்த ஆண்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், நவீன கருத்தடை செய்து கொள்ளும் நபர்களுக்கு அரசின் சார்பில் ரூ1,100/- ஊக்கத்தொகையும், ஊக்குவித்து அழைத்து வரும் நபருக்கு ரூ.200/-ம் வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மு.மகேஷ்குமார், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, பொதுசுகாதாரக் குழுத் தலைவர் கோ.சாந்தகுமாரி, இணை ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், மாநகர மருத்துவ அலுவலர் எம்.எஸ்.ஹேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: