வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் இளைஞர்களுக்கு காஞ்சி கலெக்டர் அறிவுரை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்  கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டை சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக்கல்வி பயின்ற இளைஞர்களை தாய்லாந்து, மியான்மர் மற்றும் கம்போடியா நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ‘டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’  வேலை, அதிக சம்பளம் என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால்சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி  போன்றவற்றில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த வேலைகளை செய்ய மறுப்பவர்களை துன்புறுத்தப்படுவதாக தொடர்ந்து தகவல் வருகிறது. எனவே, வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், ஒன்றிய அரசின் பதிவு ஒப்பந்தம், என்ன பணி என்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்துகொள்ளவேண்டும்.

பணி குறித்து உரிய விவரங்கள் தெரியாவிடில் தமிழ்நாடு அரசு அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மை தன்மையை உறுதி செய்துகொண்டு ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்கு செல்லும் நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைபடியும் வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் தமிழர் நலத்துறையின் 96000 23645, 87602 48625, 044-28515288 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: