மஞ்சூர்: மஞ்சூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலியானது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே மேல்குந்தா தாய்சோலை இடையே உள்ளது புலிசோலை வனப்பகுதி. இப்பகுதியில் சிறுத்தை, கரடி, காட்டுமாடு, மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக சிறுத்தைகள் அதிகளவில் உள்ளதுடன் அவ்வப்போது இரை தேடி அவரை அருகில் உள்ள கிராமங்களுக்குள் ஊடுருவுகின்றன.
இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 7 மணியளவில் புலிசோலை அருகே சாலையில் சிறுத்தை ஒன்று ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. சாலையின் நடுவே சிறுத்தை இறந்து கிடந்ததால் அவ்வழியாக சென்ற அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டன. தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையின் உடலை கைப்பற்றினர். பின்னர் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலியானது விசாரணையில் தெரியவந்தது.