சென்னை: அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்த விசாரணை நடத்தக்கோரிய வழக்கில் ஊழல் கண்காணிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் தொழில்துறையின் கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக 2018 - 2021ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் செல்வகுமார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் நிறுவனத்தின் மேலாளர், துணை மேலாளர், உதவி மேலாளர் பணி நியமனங்களிலும் முறைகேடு நடந்துள்ளதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களுக்கான மின்னணு டெண்டரிலும் முறைகேடு நடைபெற்றதால் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் பண இழப்பு ஏற்பட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டெண்டரில் குறிப்பிட்ட தொகையை மீறி அதிகப்படியான தொகைக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அம்மா சிமெண்ட் திட்டத்தின் கீழ் மற்ற சிமெண்ட் நிறுவனங்களிடமிருந்து வாங்கி சலுகை விலையில் சிமெண்ட் வழங்கப்படும் திட்டத்தின் கீழ் அதற்கு பயன்படுத்தப்பட்ட மென்பொருளை நிர்வகிப்பதற்கு தகுதியில்லாதவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து பட்டியலிட்டு ஊழல் கண்காணிப்பு துறையிடம் புகார் அளித்ததாகவும் ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஊழல் கண்காணிப்பு துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.