கோயம்பேடு மேம்பாலத்தில் விபத்து பைக் மீது வேன் மோதியதில் பிரபல ஓட்டல் மேலாளர் பலி: டிரைவர் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு மேம்பாலத்தில் பைக் மீது வேன் மோதிய விபத்தில் பிரபல தனியார் ஓட்டல் மேலாளர் பலியானார். இது சம்பந்தமாக, டிரைவரை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அருகே கரையான்சாவடி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவர், சென்னை வடபழனியில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் மேனேஜராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள மேம்பாலத்தின் மீது சென்றார்.

அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற வேன், அவரது பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நள்ளிரவு என்பதால் ஆட்கள் நடமாட்டம் குறைந்து, விபத்து பற்றி யாரும் தகவல் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், அதிகாலையில் சென்ற சிலர், யாரோ விபத்தில் சிக்கி உயிரிழந்து கிடப்பது குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலமுருகன் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்கு காரணமான வேன் டிரைவர் சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (44) கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: