வாட்ஸ் அப்பில் மனைவிக்கு தகவல்; விடுதியில் வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை

பெரம்பூர்: மனைவிக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு, லாட்ஜில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அயனாவரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி ஹவுஸிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (38). பழைய கார்களை வாங்கி விற்கும் வேலை செய்து வருகிறார். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, சுதா என்பவருடன் திருமணமாகி வில்லிவாக்கம் பாபா நகர் 6வது தெருவில் வசித்து வந்தார். கடந்த, 2 மாதங்களுக்கு முன்பு இவருக்கு காசநோய் இருப்பது தெரியவந்தது. இதனால், மனைவியிடம் கூறிவிட்டு அயனாவரம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 18ம் தேதி கணேசன் அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு தனது மனைவி சுதாவிற்கு வாட்ஸ் அப்பில், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தகவல் அனுப்பியுள்ளார். இதனை, பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, கணவரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. இதனால், அவரது நண்பர்களிடம் விசாரித்து  அயனாவரம் பகுதியில் உள்ள லாட்ஜிக்கு வந்து அவரது தங்கியிருந்த அறையின் கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மின்விசிறியில் கணேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

இதுகுறித்து தங்கும் விடுதியை சேர்ந்த நபர்கள் அயனாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அயனாவரம் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: