திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்கு நடை திறந்த பின்னர் சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். இன்று 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் நடை திறந்த கடந்த 16ம் தேதி மாலை முதல் தொடர்ந்து பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். வார இறுதி மற்றும் விடுமுறை நாளான நேற்று முன்தினமும், நேற்றும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கடந்த 5 நாளில் மட்டும் சபரிமலையில் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.