சித்தூர் காணிப்பாக்கத்தில் திரண்டனர் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதல்-10 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

சித்தூர் : சித்தூர் ஸ்ரீகாணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில் ஐயப்ப சுவாமி பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீகாணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திரா தமிழ்நாடு கர்நாடகா, கேரளா மகாராஷ்டிரா தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். அவ்வாறு பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப கோயிலில் உள்ள உண்டியலில் தங்கம் பணம் வெள்ளி உள்ளிட்டதை செலுத்தி செல்கின்றனர்.

கடந்த 18ம் தேதி கார்த்திகை மாதம் முதல் நாள் என்பதால் எப்போதும் இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதே போல் கார்த்திகை மாதம் என்பதால் ஆந்திர மாநிலம் முழுவதும் பல லட்சம் பக்தர்கள் ஐயப்பன் சுவாமிக்கு மாலை அணிந்து சபரிமலைக்கு செல்கிறார்கள்.

அவர்கள் பேருந்துகளிலும் கார்களிலும் வேன்களிலும் சபரிமலைக்கு செல்கிறார்கள்.அவ்வாறு ஐயப்ப சுவாமி பக்தர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் போது சித்தூர் மாவட்ட வழியாக சபரிமலைக்கு செல்ல வேண்டும். வரும் வழியில் ஸ்ரீகாணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் இருப்பதால் பக்தர்கள் செல்லும் வழியில் விநாயகரை தரிசனம் செய்து செல்கிறார்கள். அவ்வாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஐயப்ப சுவாமி பக்தர்கள் வருகை தந்தார்கள்.

இதனால் எப்போதும் இல்லாத அளவிற்கு கார்த்திகை மாதம் 3ம் நாள் அன்று ஸ்ரீகாணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 10 மணி நேரத்துக்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாத வகையில் கோயில் நிர்வாகத்தால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. அதேபோல் பக்தர்கள் வரும் பேருந்துகள், கார்கள், வேன்கள், உள்ளிட்டவை நிறுத்த பார்க்கிங் வசதியை ஏற்படுத்தியது.இதனால் ஸ்ரீகாணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் முன்பு கார் பார்க்கிங் இடத்தில் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் அணிவகுத்து நின்றது.

Related Stories: