ஒரு குவார்ட்டருக்காக ஒரு உயிர் பறிப்பு தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து மனைவி கொலை: 2வது கணவர் அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னை:  ஒரு குவார்ட்டர் மது அருந்த பணம் தராததால் தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி மனைவியை கொலை செய்ததாக 2வது கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகரில் கடந்த 17ம்தேதி நள்ளிரவு 1.30 மணி அளவில் இளம்பெண் ஒருவர் தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். இது குறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அம்பத்தூர் உதவி ஆணையர் கனகராஜ் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையிலான தனிப்படை அமைத்து கொலையாளியைதேடினர். இறந்தவர் பவித்ரா (28) என்பதும் சில வருடங்களுக்கு முன்பு செங்குன்றத்தை சேர்ந்த ரெஜிஸ் (35) என்பவரும், காதல் திருமணம் செய்தது தெரியவந்தது. கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து சென்றுவிட்டனர். அதன்பிறகு பவித்ராவுக்கும், அம்பத்தூர் கள்ளிக்குப்பம், கங்கை நகர் பகுதியை சேர்ந்த ராஜா (39) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து ஒரேவீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். ராஜா, விவாகரத்தானவர். பவித்ரா, கொலை செய்யப்பட்டபோது ராஜா வீட்டில் இல்லை. போலீசார் ராஜாவை தேடினர். இந்நிலையில் தலைமறைவான ராஜா, அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று காலை 7 மணி அளவில் சம்பவ இடத்துக்கு சென்ற இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார், ராஜாவை மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்.

குடிக்க பணம் தராததால் பவித்ராவுக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்து தாலிக்கயிற்றால் பவித்ராவை கொலை செய்துவிட்டேன் என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் கைதுசெய்யப்பட்ட ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: