2வது திருமணம் செய்த குற்றம் தம்பதிக்கு செருப்பு மாலை போட்டு சிறுநீரை குடிக்க வைத்து கொடுமை: ராஜஸ்தானில் பஞ்சாயத்து தண்டனை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 2வது  திருமணம் செய்த வாலிபருக்கும்,  மனைவிக்கும்   செருப்பு மாலை போட்டு, சிறுநீரை  குடிக்க வைத்த பஞ்சாயத்து தீர்ப்பு,  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் நகரின் மதோராஜ்புரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது, கணவனும், மனைவியும் பஞ்சாயத்தில்  தண்டிக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இது பற்றி போலீசார் கூறியதாவது:

இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட  வாலிபருக்கு 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், அவர் மனைவியை பிரிந்து வாழ்கிறார்.  சில மாதங்களுக்கு இவர், வேறொரு பெண்ணை 2வது திருமணம் செய்தார்.  இது குறித்து முதல் மனைவி,  கிராம பஞ்சாயத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வாலிபரையும், அவரின் 2வது மனைவியையும் பஞ்சாயத்து பெரியவர்கள் விசாரித்தனர்.  

2வது திருமணம் செய்த குற்றத்துக்காக வாலிபருக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்த அவர்கள்,  இருவருக்கும் செருப்பு மாலை அணிவித்தனர். மேலும்,  இருவருக்கும் பாட்டிலில் நிரப்பப்பட்ட சிறுநீரை கொடுத்து குடிக்க வைத்துள்ளனர்.  இது தொடர்பாக  5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

Related Stories: