திருவொற்றியூர்: திருவொற்றியூர் மாநகராட்சி பள்ளியில் சேதமடைந்த வகுப்பறைகளை அகற்றிவிட்டு, புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு, கே.பி.சங்கர் எம்எல்ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். திருவொற்றியூர், காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பகுதியில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக, பள்ளியின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டதோடு, மழைநீர் வகுப்பறைக்குள் கசிந்திருந்தது.