தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்த 13 பேரின் குடும்பங்களுக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியோடு மேலும் கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வீதம் நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடியில் 2018ம் தேதி மே மாதம் 22ம் தேதி, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.  

அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 19-10-2022 அன்று நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்திடும் வகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 65 லட்சம் ரூபாயினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: