மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை; களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை

களக்காடு: களக்காடு தலையணை நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குதொடர்ச்சி மலையில் தலையணை நீர்வீழ்ச்சி உள்ளது. வனத்துறையினரால் சுற்றுசூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி, அதிக குளுமையுடன் ஓடி வருவதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை பெய்து வருகிறது. ஊர் பகுதிகளில் லேசான மழை காணப்பட்ட போதிலும் உள்மலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

இதனைதொடர்ந்து களக்காடு தலையணையில் கடந்த 5ம்தேதி முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் பாய்ந்தோடியது. இதையடுத்து தலையணையில் குளிக்க கடந்த 5ம்தேதி முதல் வனத்துறையினர் தடை விதித்தனர்.

இந்நிலையில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து 6 நாட்களுக்கு பின் கடந்த 11ம்தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக தலையணையில் இன்று காலை முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில்  இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்படுவதாக வனசரகர் பிரபாகரன் அறிவித்துள்ளார்.

Related Stories: