கொள்ளிடம்: மயிலாடுதுறை அருகே கொள்ளிடம் பகுதியில் மழைநீர் வடியாததால் 33 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் கொள்ளிடம் அருகே அளக்குடி, மகேந்திரப்பள்ளி, காட்டூர், புளியந்துறை, பச்சை பெருமாநல்லூர், உமையாள்பதி, மகாராஜபுரம், ஆலங்காடு, வேட்டங்குடி, வேம்படி இருவக்கொல்லை, குமரக்கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 33 ஆயிரம் ஏக்கரில் சம்பா நேரடி விதைப்பு செய்துள்ள நெற்பயிர் 5 நாட்களாக தண்ணீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து நெற்பயிர் தண்ணீருக்குள்ளேயே இருந்து வருவதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருந்து வருகின்றனர். தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வீடுகளுக்குள் குடியிருக்க முடியாமல் கிராம மக்கள் தவிக்கின்றனர். தண்ணீர் வடிய இன்னும் இரண்டு மூன்று நாட்களாகும் என தெரிகிறது. மீண்டும் மழை பெய்யாமல் இருந்தால் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் படிப்படியாக வடியக்கூடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.