உத்திரமேரூர் அருகே பலத்த மழையால் முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு காஞ்சிபுரம் எஸ்பி நிவாரணம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாளாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதில், உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட காக்கநல்லூர் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதியும் பாதிக்கப்பட்டது. இந்த குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதையடுத்து அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியின் மழைக்கால நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த முகாமை பார்வையிட காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சுதாகர் நேற்று வந்தார். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அனைவருக்கும் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மேலும் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், ஏதாவது குறைகள் இருந்தால் உடனே தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். நிகழ்வின் போது டிஎஸ்பி ஜூலியஸ்சீசர், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உட்பட போலீசார் உடனிருந்தனர்.

Related Stories: