ஜார்கண்டில் இடஒதுக்கீடு 77 சதவீதமாக அதிகரிப்பு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறியது

ராஞ்சி: ஜார்கண்டில்  இடஒதுக்கீட்டை 77 சதவீதமாக அதிகரித்து மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பாஜ எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜார்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2019 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்படும் என ஹேமந்த் சோரன் வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றுவதற்கான மசோதாவுக்கு இம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, தற்போது இந்த மாநிலத்தில் 60 சதவீதமாக உள்ள இடஒதுக்கீட்டு அளவை 77 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதா, சட்டமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை எதிர்த்து, பாஜ எம்எல்ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த மசோதாவின்படி, தலித்துகளுக்கான ஒதுக்கீடு 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 26 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாகவும், மிகவும் பிற்பட்டோருக்கு 14 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், இதர பிற்பட்டோருக்கு 12 சதவீதமும், பொருளாதார ரீதியாக நலிந்த உயர் பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

Related Stories: