வேலூர்: வேலூர் புதிய மீன் மார்க்கெட் பகுதியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மேயர் சுஜாதா ஆகியோர் இன்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது மீன் மார்க்கெட்டில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கால்வாய்களில் உரிய முறையில் விடப்படுகிறதா? மீன் மார்க்கெட்டில் தரமான மீன்கள் விற்கப்படுகிறதா?, சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து மேயர் சுஜாதா நிருபர்களிடம் கூறுகையில், ‘மீன் மார்க்கெட் எதிரே சென்டர் மீடியன் உள்ளது. இதன் ஒரு பகுதி முழுவதும் மீன் மார்க்கெட் வியாபாரிகள் ஆக்கிரமித்து விடுவதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக அருகில் உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டு பின்னர் திறக்கும்போது ஒட்டுமொத்தமாக வாகனங்கள் வரும்போது போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. எனவே மார்க்கெட் எதிரே உள்ள சென்டர் மீடியனை உடனடியாக அகற்றி போக்குவரத்து சீர்செய்யப்படும். தேவைக்கேற்ப சில அடி தூரம் விலக்கி சென்டர் மீடியன்களை பொருத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். மீன் மார்க்கெட் சிறப்பான முறையில் பராமரிக்கின்றனர். கழிவுநீர் நேரடியாக கால்வாய்களுக்குத்தான் செல்கிறது. இவ்வாறு கூறினார். ஆய்வின்போது துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் அசோக்குமார், உதவி ஆணையர் செந்தில்குமார், இளநிலை பொறியாளர் ஆறுமுகம் உட்பட பலர் உடனிருந்தனர்.
