மதுரை: மதுரை அருகே நடந்த ஏழு ஊர் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் இன்று 6 சப்பரங்கள் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தன. 4 மாவட்ட மக்கள் தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டத்தில் டி.கல்லுப்பட்டி, வன்னிவேலம்பட்டி, தேவன்குறிச்சி, வி.சத்திரப்பட்டி, கிளாங்குளம், வி.அம்மாபட்டி, காடனேரி ஆகிய 7 கிராமங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான திருவிழா செவ்வாய்க்கிழமை துவங்கியது. மேலும் இத்திருவிழா சப்பர திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது, இதையொட்டி அம்மாபட்டியை தவிர, 6 கிராமங்களிலும் சப்பரம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. மூங்கிலில் ஒவ்வொரு சப்பரமும் 33 அடி முதல் 40 அடி வரை வடிவமைக்கப்பட்டிருந்தது. திருவிழாவின் முக்கிய நாளான இன்று அந்தந்த கிராம மக்கள் சப்பரங்களை அம்மாபட்டிக்கு கொண்டு வந்தனர். இங்கு மண்ணால் வடிவமைக்கப்பட்ட 7 ஊர் அம்மன்களுக்கும் கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.