எண்ணூர் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி இன்ஜினியரிங் மாணவன் பலி: மற்றொரு மாணவனுக்கு தீவிர சிகிச்சை

திருவொற்றியூர்: எண்ணூர் கடலில் குளித்தபோது, ராட்சத அலை இழுத்துச் சென்றதில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரோஷன் (20). ஆவடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்தார். இவர், நேற்று மதியம் அதே கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சக மாணவன் எண்ணூர் காமராஜ் நகர் நகரை சேர்ந்த பெர்னாண்டோ (20) என்பவரை பார்க்க வந்துள்ளார். பின்னர் இருவரும் தாழங்குப்பம்  அருகே உள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக இருவரையும் ராட்ச அலை ஒன்று உள்ளே இழுத்துச் சென்றது. இதை கடற்கரையில் வலை பின்னிக் கொண்டிருந்த மீனவர்கள் பார்த்தனர். உடனடியாக கடலில் குதித்து இருவரையும் மீட்க முயன்றனர்.

ஆனால், பெர்னாண்டோவை மட்டும் மீட்க முடிந்தது. அவரை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நீண்ட நேரம் தேடியும் ரோஷன் கிடைக்கவில்லை. இந்நிலையில், மாலையில் ரோஷனின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரோஷன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: