காதல் ஜோடியை வேலையை விட்டு நீக்கியதால்; தொழிலதிபர், மனைவி, உதவியாளர் கொலை: டெல்லி, பீகாரில் 6 பேர் கும்பல் கைது

புதுடெல்லி: காதல் ஜோடியை வேலையை விட்டு நீக்கியதால் தொழிலதிபர், அவரது மனைவி, உதவியாளர் ஆகியோரை வீடுபுகுந்து கொன்றுவிட்டு, அவர்கள் வீட்டில் இருந்து விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது ெசய்தனர். தலைநகர் டெல்லியின் ஹரி நகரில் கடந்த வாரம், தொழிலதிபர் சமீர் அஹுஜா (38), அவரது மனைவி ஷாலு (35) மற்றும் வீட்டு உதவியாளர் சப்னா (33) ஆகியோர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டனர்.

ஆனால் தம்பதியரின் மூன்று வயது மகள் கட்டிலுக்கு அடியில் படுத்துக் கொண்டதால், கொலை கும்பலிடம் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இச்சம்பவம் தொடர்பாக அமித் மேதோ (18), ரம்ஜான் (19), சவுரப் (20) உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். டெல்லி, பீகாரில் பதுங்கியிருந்த அவர்களிடம் இருந்து ரூ.3.95 லட்சம் ரொக்கம், மூன்று விலையுயர்ந்த கடிகாரங்கள், நான்கு ஐபோன் மற்றும் ஒன்பிளஸ் போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் டிசிபி (மேற்கு) கன்ஷியாம் பன்சால் கூறுகையில்,  ‘தொழிலதிபர் சமீர் அஹுஜாவின் சலூனில் கைதான குற்றவாளி அமித் மேதோவும் அவனது  காதலியும் வேலை செய்து வந்தனர். இருவரையும்  கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சமீர் அஹுஜா வேலையை விட்டு நீக்கினார். இதனால் அமித் மேதோ வேதனையில் இருந்தான்.

இந்த நிலையில் சமீர் அஹூஜாவை அவரது  வீட்டில் சந்தித்து மீண்டும் வேலை கேட்க அமித் மேதோவும் அவனது நண்பர்களும்  சென்றனர். அப்போது அவர்கள்  சமீர் அஹுஜாவின் வீட்டில் இருந்த பொருட்களை  கொள்ளையடிக்க முயன்றனர். அதனை தடுத்ததால் சமீர் அஹுஜா, ஷாலு, சப்னா ஆகியோரை  கொன்றுவிட்டு, விலையுயர்ந்த பொருட்களை அள்ளிச் சென்றனர். அதிர்ஷ்டவசமாக  கட்டிலின் அடியில் படுத்துக் கொண்ட சிறுமி உயிர்தப்பினார்’ என்றார்.

Related Stories: