சென்னை: மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து, ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு தடைக்கல்லாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். சென்னை பட்டாளத்தில் உள்ள உயர்நிலை பள்ளியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு. நேற்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் சென்னை மேயர் பிரியா, எம்எல்ஏ தாயகம் கவி மற்றும் பலர் இருந்தனர்.
பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 9ம்தேதி கனமழை இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதை சமாளிக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புளியந்தோப்பு, சவுகார்பேட்டை பகுதியில் கட்டிடம் இருந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை அப்புறப்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மாநகராட்சியும் நோட்டீஸ் வழங்கி உள்ளது. ஆனாலும் கீழமை நீதிமன்றத்தில் ஒப்புதல் பெற்று குடியிருந்து வந்துள்ளனர்.