வடகிழக்கு பருவமழை தீவிரம் எதிரொலி குன்னூரில் மழைக்கால பாதுகாப்பு உபகரணங்களை கலெக்டர் ஆய்வு

ஊட்டி :  வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உபகரணங்களை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் அதிகமாக இருக்கும். தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் குன்னூர் ஆர்டிஒ அலுவலகத்தில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

அதன்பின், அவர் கூறுகையில்,‘‘வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, தோட்டக்கலைத்துறை, மின்வாரியம், காவல்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மற்றும் குடிமை பொருள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து பணியாற்றிட 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 6 வட்டங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு எற்படக்கூடிய இடங்களை நேரில் பார்வையிட்டு பாதிப்பு ஏதேனும் ஏற்படும் போது உடனடியாக அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்க வைக்க அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

 முகாம்களில் தங்க வைக்க வைக்கும் மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். நிவாரண முகாம்களில் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, கழிப்பிடம் மற்றும் மின்வசதி போன்றவை தயாராக இருப்பதை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இயற்கை இடர்பாடுகளினால் சாலைகளில் மரம் விழுந்தால் அதனை உடனடியாக அகற்றுவதற்காக பயன்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு காப்பாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் இருப்பு மற்றும் அதன் செயல்முறை விளக்கத்தினை பார்வையிட்டு அனைத்து உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் இயங்கும் நிலையில் உள்ளதா? என்பதனையும் ஆய்வு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

முன்னதாக, இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு அழைத்து செல்லும் வகையில் கைண்டர் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட வாகனத்தை கலெக்டர் அம்ரித் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குன்னூர் ஆர்டிஓ (பொறுப்பு) கண்ணன், குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின், தாசில்தார் சிவக்குமார், தன்னார்வலர்கள் ரமணா, சமந்தா, அறக்கட்டளை நிர்வாகி டயானா பாருச்சா, எச்பிசிஎல் துணை பொது மேலாளர் வசந்தாராவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: