பராமரிப்பு பணிகள், மோசமான வானிலையால் சென்னையில் இருந்து அந்தமானுக்கு 3 நாட்கள் விமான சேவை ரத்து

சென்னை: பராமரிப்பு பணிகள், மோசமான வானிலையால் சென்னையில் இருந்து அந்தமானுக்கு 3 நாட்கள் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு தினமும் 5 முதல் 7 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. அந்தமான் சுற்றுலா தளமாக இருப்பதால் பயணிகள் பெருமளவு அந்தமானுக்கு சென்று வருகின்றனர்.

அந்தமானில் தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் ஏராளமானவா்கள் வசிப்பதால் அந்தமான் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து இருக்கும். ஆனால் அந்தமானில் பகல் 3 மணியில் இருந்து தரைக்காற்று வீசத்தொடங்கி விடும் என்பதால் விமானங்கள் தரையிறங்கவோ, புறப்படவோ முடியாது. இதனால் அந்தமான் விமான நிலையத்தில் அதிகாலையில் இருந்து பிற்பகல் வரை மட்டுமே விமான சேவைகள் நடக்கும்.

மாலை மற்றும் இரவு நேரங்களில் விமான சேவைகள் கிடையாது. இந்த நிலையில் தற்போது அந்தமானில் மோசமான வானிலை நிலவுவதாலும், அந்தமான் விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதாலும், அந்தமான் விமான போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் சென்று வரும் விமான நிறுவனங்கள் தங்களுடைய விமான சேவைகளை நேற்று முதல் 4-ம் தேதி நாளை வரை 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் 5-ம் தேதியில் இருந்து அந்தமானுக்கு சென்னையில் இருந்து விமான சேவைகள் தொடங்குகிறது. அந்தமானுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு தகவல் தரப்பட்டு டிக்கெட்டுகளை வேறு தேதிகளுக்கு மாற்றுதல் அல்லது முழு பணமும் திரும்ப கொடுத்தல் போன்ற முறைகளை விமான நிறுவனங்கள் செய்து கொண்டதாகவும், இதனால் பயணிகளுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

Related Stories: