கூடலூர் அருகே தேயிலைத்தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த சிறுத்தை: வனத்துறையினர் விசாரணை

கூடலூர்: கூடலூர் அருகே தேயிலைத்தோட்டத்தில் சிறுத்தை மர்மமாக இறந்து கிடந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது ஓவேலி. இங்குள்ள பாரதி நகரில் உள்ள தேயிலைத்தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடப்பதை தொழிலாளர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கூடலூர் கோட்டவன அலுவலர் கொம்மு ஓம்காரம் தலைமையில் உதவி வனப்பாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர் யுவராஜ், வானவர் சுதீர்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சிறுத்தையை பார்த்தனர். சிறுத்தை எந்த வழியாக இப்பகுதிக்கு வந்தது? என்பது குறித்து மோப்ப நாய் மூலம் தேடுதல் நடத்தப்பட்டது.

பின்னர் அந்த பகுதியில் கிடந்த சிறுத்தையின் எச்சங்கள் சேகரிக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிறுத்தையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். ரசாயன பரிசோதனைக்காக முக்கிய உறுப்புகள் சேகரிக்கப்பட்ட பின்னர் சிறுத்தை அப்பகுதியில் எரியூட்டப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘இறந்து கிடந்தது சுமார் 6 வயது உள்ள ஆண் சிறுத்தை. சிறுத்தை இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம். அதன் உடலில் காயங்கள் இதுவும் காணப்படவில்லை. சிறுத்தையின் உடலில் சேகரிக்கப்பட்ட முக்கிய உறுப்புகளின் ரசாயன ஆய்வுக்கு பின்னரே சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரிய வரும்’’ என்றனர்.

Related Stories: