கனமழை காரணமாக மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை: வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓரிரு தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் வரும் 6-ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார். அதேபோல கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம். விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் மோகன் விடுமுறையை அறிவித்தார். கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று புதுச்சேரி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.     

Related Stories: