மேட்டூர்: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவில் நீடிக்கிறது.
இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 20,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 6 மணியளவில் 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலையும் நீர்வரத்து 26 ஆயிரம் கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால், உபரிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கான நீர்வரத்து சரிவால் கடந்த வாரம் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு மூடப்பட்ட நிலையில், நேற்று மாலை மீண்டும் திறக்கப்பட்டது.
16 கண் மதகு வழியாக விநாடிக்கு 4,500 கனஅடி வீதமும், நீர்மின் நிலையங்கள் வழியாக 21,500 கனஅடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 6 நாட்களுக்கு பின்பு மீண்டும் 16 கண் மதகு வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 22வது நாளாக அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.