தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று முதல்  4-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கும் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் இன்று விடுமுறை அறிவித்துள்ளனர். திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

 சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நகர் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நாகை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், செய்யூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை வில்லிவாக்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. காரைகாலில் கடந்த 24 மணி நேரத்தில் 7 செ.மீ மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: