சாயல்குடி: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 115வது ஜெயந்தி விழா, 60வது குருபூஜை விழா கடந்த 27ம் தேதி மாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 3ம் நாளான நேற்று தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, பெரியகருப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள் நேற்று காலை 9.30 மணியளவில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடம் சென்று மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கத் தமிழ்செல்வன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.