தமிழக அரசு 22% கேட்ட நிலையில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19 சதவீதமாக உயர்த்த ஒன்றியஅரசு அனுமதி

சென்னை: நடப்பாண்டின் நெல் கொள்முதல் சீசன் செப்டம்பர் 1ம் தேதி துவங்கியது. இந்த சீசனில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, ஒன்றிய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், இம்மாத துவக்கத்தில் நல்ல மழை பெய்து வருவதால், நெல்லின் ஈரப்பதம் அதிகரித்தது. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, 22 சதவீதம் ஈரப்பதமான நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசிடம் தமிழக அரசு அனுமதி கேட்டு கடிதம் எழுதியது. இதை தொடர்ந்து, இந்திய உணவு கழக தரக் கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குனர் தலைமையிலான குழு, டெல்டா மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். மேலும் அவற்றை ஆய்வகத்தில் பரிசோதித்து, ஒன்றிய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன், அடிப்படையில் நெல் கொள்முதலை 19% வரை உயர்த்தி ஒன்றிய அரசு அனுமதி வழங்கி தமிழக அரசுக்கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளது.

Related Stories: