சிவசங்கர் பாபா மீதான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப்பெற கோரி சிபிசிஐடி மனு தாக்கல்

சென்னை: சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவனின் தாய்க்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தம் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆன தாமதத்தை காரணம் காட்டி சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், சிவசங்கர் பாபா மீதான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சிபிசிஐடி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தாமதமாக புகார் அளிக்கப்பட்டது என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து வழக்கை ரத்து செய்ய முடியாது. புகார்தாரரின் விளக்கத்தை கேட்காமல் சிவசங்கர் பாபா மீதான வழக்கை ரத்து செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது என்று  கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாக தெரிவித்தார்.

Related Stories: