தமிழ்நாட்டில் முதல்முறையாக கிராமசபை கூட்டம் போல் நகரசபை, மாநகரசபை கூட்டம்: சென்னை பம்மல் 6வது வார்டில் நேரடியாக பங்கேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: கிராமசபை கூட்டம் போல் தமிழ்நாட்டில் முதல்முறையாக நகரசபை, மாநகர சபை கூட்டம் நடைபெற உள்ளது. வரும் ஒன்றாம் தேதி முதல் நகரசபை மற்றும் மாநகரசபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  தமிழகத்தில் ஜன.26, மே 1 , ஆகஸ்ட் 15, அக்.2, மார்ச் 22, நவ.1 ஆகிய 6 நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கிராம சபை கூட்டத்தை பொறுத்தவரை அங்கு நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் கேட்கப்படும். மேலும்  கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்ல அதற்கான திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

அதன் அடிப்படையில் நகர பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களின் குறைகளை கேட்டு, அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் கிராம சபை கூட்டம் போன்று நகரசபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் நடைபெற உள்ள நகரசபை, மாநகரசபை கூட்டங்களில் மக்கள் குறை கேட்கப்படும். நவம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ள மாநகரசபை கூட்டத்தில், சென்னை பல்லாவரம் அருகே பம்மல் 6வது வார்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்று மக்கள் குறை கேட்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக, முன்னேற்பாடுகளை பம்மல் பகுதிகளில் அதிகாரிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Related Stories: