ஒரே மாதிரியான சின்னம் பிரச்னை விவகாரம் மொபைல் பே நிறுவனம் பண பரிவர்த்தனை செய்ய தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வர்த்தக சின்னம் பிரச்னை தொடர்பாக போன்பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில் பண பரிவர்த்தனை சேவைகளை வழங்க மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியான ஃபோன் பே நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தங்கள் நிறுவனத்தின் வர்த்தக சின்னத்தை போல் மொபைல் பே சின்னம் உள்ளதால் அந்த செயலிக்கு தடை விதிக்க கோரியிருந்தது.  எங்கள் நிறுவனத்தின் லோகோவை போல் மொபைல் பே செயலியின் லோகோவும் உள்ளதால் வாடிக்கையாளர்களிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இரு செயலிகளின் வணிக சின்னங்களும், லோகோக்களும் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், சாதாரண பொதுமக்கள் பார்வையில் அவை ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளது. எனவே, மொபைல் பே நிறுவனம் பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ள கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மொபைல் பே செயலியில் மற்ற வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்குவது தொடர்பான ஃபோன் பே கோரிக்கை குறித்து பதிலளிக்கும்படி கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: