சென்னை: முத்துராமலிங்க தேவர் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி சென்னை, நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் செல்வதை அவர் தவிர்த்து விட்டார். அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115வது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வருகிற 30ம் தேதி (ஞாயிறு) காலை 10 மணியளவில் சென்னை, நந்தனம் அண்ணாசாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருஉருவச் சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமை கழக செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.