வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்-சுற்றுலா பயணிகள் உற்சாகம்

வேதாரண்யம் : தேவாரண்யம் அருகே கோடியக்கரை சரணாலயத்தில் லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் தஞ்சமடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் தற்போது சரணாலயத்திற்கு செங்கால் நாரை கூழைகிடா, பூநாரை, கடல் காகம், கடல் ஆலா மற்றும் உள்ளான் வகைகள், வரி தலைவாத்து உள்ளிட்ட பறவைகள் லட்சகணக்கில் வந்து குவிந்துள்ளது. ரஷியா, சைபீரியா பகுதியில் இருந்து செங்கால் நாரை பறவைகள் அதிகளவில் வந்துள்ளது.

பறவைகள் சரணாலயத்தில் தற்போது அடிக்கடி மழை பெய்வதாலும், பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதாலும், இந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக கூட்டம், கூட்டமாக பறவைகள் வந்து தஞ்சமடைந்துள்ளது. பறவைகள் இரை தேட சிறகடித்து பறப்பது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்த பறவைகளை சரணாலயத்தில் இரட்டைதீவு, கோவை தீவு ,நெடுந்தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் கண்டுகளிக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: