சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக விற்பனையாகும். இந்தாண்டு அதிகளவில் மதுபானம் விற்க டாஸ்மாக் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் போதுமான அளவு மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டன. சனி,ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய மூன்று நாட்களில் ரூ.708 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த 22ம் தேதி சென்னையில் ரூ.38.64 கோடி, திருச்சியில் ரூ.41.36 கோடி, சேலத்தில் ரூ.40.82 கோடி, மதுரையில் ரூ.45.26 கோடி, கோவையில் ரூ.39.34 கோடி என மொத்தம் ரூ.205.42 கோடிக்கு மது விற்பனை நடந்தது.