சென்னை: வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், தர்மயுத்தம் தொடங்கினார். அதன்பின்னர் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் சேர்ந்து ஆட்சி அமைத்த பிறகு, ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த ஆணையம், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தனது அறிக்கையை அளித்தது. பின்னர் அமைச்சரவையில் இந்த அறிக்கை முன் வைக்கப்பட்டது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு, அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.