ரயிலில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மூர்த்தி, போலீஸ்காரர் முத்துப்பாண்டி ஆகியோர் நேற்று காலை பெரம்பூர் ரயில் நிலையம் பின்புறம் உள்ள மங்களபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த ரயிலில் வந்திறங்கிய நபரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது பண்டல், பண்டலாக கஞ்சா இருந்தது. இதையடுத்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.

அதில், மதுரை மாவட்டம் ஆளவந்தான் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் (26) என்பதும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி, மதுரைக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் மற்றும் போலீசாரின் பாதுகாப்பு அதிகமாக இருக்கும் என்பதால் பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி பஸ் மூலம் மதுரைக்கு செல்ல திட்டமிட்டது தெரியவந்தது. அவரை கைது செய்து, 5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: