மணலி புதுநகரில் ஐயா வைகுண்ட தர்மபதி கோயில் தேரோட்டம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

திருவொற்றியூர்: மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாள் திருவிழா சிறப்பபாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 7ம் தேதி திருநாம கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், தினமும் காளை, அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம் உள்ளிட்ட வாகனங்களில் அய்யா எழுந்தருளி வலம் வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடை-உகப்படிப்பும், பின்னர் திருத்தேர் அலங்காரம் மற்றும் பணிவிடை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்ட தர்மபதி இலுப்பை, தேக்கு மரங்களை கொண்டு செய்யப்பட்ட 36 அடி உயரம், 36 டன் எடை கொண்ட திருத்தேரில் புதுநகர் பகுதிகளில் வீதி உலா வந்தார்.

திருநெல்வேலி எம்பி ஞானதிரவியம், சமத்துவ மக்கள் கழக மாணவரணி செயலாளர் கார்த்திக் நாராயணன், முன்னாள் எம்பி ஜெயதுரை, நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் கொட்டிவாக்கம் ஏ.முருகன், திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், தேசிய நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.விஜயக்குமார், தர்மபதி நிர்வாக தலைவர் துரைப்பழம், பொருளாளர் ஜெயக்கொடி, சட்ட ஆலோசகர் ஐவென்ஸ், நிர்வாகிகள் சுந்தரேசன், மனுவேல், கிருபாகரன், பாலகிருஷ்ணன், கண்ணன், உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, “அய்யா அரகர சிவ சிவ, அய்யா உண்டு” என பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் செல்லும் வழியில் பக்தர்களுக்கு நீர், மோர் அன்னதானம் வழங்கினர். இரவு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, அய்யா இந்திர விமானத்திலும், இரவு பூம்பல்லக்கு வாகனத்திலும் பதிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். தொடர்ந்து திருநாமக்கொடி அமர்வுடன் திருவிழா நிறைவு பெற்றது.

Related Stories: