சென்னை: உலக பசி குறியீட்டு அறிக்கை வெளியாகி இருக்கிறது. இதில் கணக்கெடுக்கப்பட்ட 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்தில் இருக்கிறது. இதை ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. இந்த நிலையில், ‘இந்த அறிக்கைக்கு எதிராக பொய்களை பரப்பாமல், மக்களின் பசியை போக்க வேண்டும்’ என்று, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நேற்று மநீம வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பாண்டு உலக பசி குறியீட்டில், மொத்தமுள்ள 121 நாடுகளில் இந்தியா 107வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை விட இந்தியா பின்தங்கி இருப்பது வேதனை அளிக்கிறது. இந்திய குழந்தைகள் எடை குறைவாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.