அமலாக்கத்துறை தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் முழுமையான சுதந்திரத்துடன் செயல்படுகிறது: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

வாஷிங்டன்: அமலாக்கத்துறை தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் முழுமையான சுதந்திரத்துடன் செயல்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு சென்றார். அவர் தனது பயணத்தில் இறுதி நாளான நேற்று உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய மாநாட்டில் பங்கேற்றார். அதன் பின் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

குறிப்பாக, தனியார் துறையினர் மற்றும் சிவில் சமூகத்தினரை வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை மூலம் அரசு அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன், குற்றங்களை கண்காணித்து பின் தொடர்ந்து செல்லும் அமைப்பு அமலாக்கத்துறை. அந்த அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் சுதந்திரமானவை. மத்திய புலனாய்வு அமைப்பாக இருந்தாலும் சரி பிற விசாரணை அமைப்புகளாக இருந்தாலும் சரி குற்றம் முதலில் மற்ற அமைப்புகளால் கண்டறியப்படுகிறது.

அதன் பின்னர் தான் அந்த விசாரணை வளையத்திற்குள் அமலாக்கத்துறை வருகிறது. அமலாக்கத்துறை போன்ற எந்த விசாரணை அமைப்புகளும் பழிவாங்கும் நோக்கத்தோடு பயன்படுத்தப்படவில்லை. அமலாக்கத்துறை எந்த விவகாரத்திலும் முதலில் வருவதில்லை. நான் எந்த ஒரு தனிப்பட்ட வழக்குகள் மற்றும் யுக்திக்குள் செல்லவிரும்பவில்லை. ஆனால், சில விவகாரங்களில் அடிப்படை ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை நுழையும்போது மிகவும் தனித்து நிற்கும் செயல்பாடுகள் வெளிவருகிறது என்றார்.

Related Stories: