17, 19, 21ல் காவலர் நினைவு நாள் அனுசரிப்பு 3 நாள் காலை ஒரு மணிநேரம் போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

சென்னை: காவலர் நினைவிடத்தில் காவலர் நினைவு நாள் அனுசரிப்பதை ஒட்டி நாளை மற்றும் 19, 21 ஆகிய 3  நாட்களுக்கு காலை 8 மணியிலிருந்து 9 மணி வரை  போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: வரும் 21ம் தேதி காலை 8 மணிக்கு காவல் துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் காவலர் நினைவு நாள் அனுசரிப்பதை ஒட்டி அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இதுதொடர்பான ஒத்திகை நடக்கிறது. எனவே, 17, 19, 21 ஆகிய 3  நாட்களுக்கு காலை 8 மணியிலிருந்து 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் காரணீஸ்வரர் கோயில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி  காரணீஸ்வரர் பகோடா தெரு, அம்பேத்கர் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாக டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை அல்லது காமராஜர் சாலை செல்லலாம். சாந்தோம் சாலை வழியாக காந்தி சிலை நோக்கி வரும் மாநகர பேருந்துகள் சாந்தோம் சிக்னலில் இடதுபுறம் திரும்பி கச்சேரி சாலை, லஸ் சந்திப்பில் வலது புறம் திரும்பி ராயப்பேட்டை மெயின் ரோடு இடதுபுறம் திரும்பி ராதாகிருஷ்ணன் சாலை சென்று அவரவர் இலக்கை அடையலாம்.

கண்ணகி சிலையிலிருந்து காமராஜர் சாலை வழியாக சாந்தோம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் லாயிட்ஸ் சாலை சந்திப்பில் இடது புறம் திரும்பி கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக கலங்கரை விளக்கம், காரணீஸ்வரர் கோயில் சந்திப்பிற்கு செல்லலாம். டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக கண்ணகி சிலைக்கும் மற்றும் கலங்கரை விளக்கம் வழியாக சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள்  டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை  கலங்கரை விளக்கம் எம்.ஆர்.டி.எஸ் அருகில் இடது புறம் திரும்பி லாயிட்ஸ் சாலை சர்வீஸ் ரோடு வழியாக காமராஜர் சாலைக்கும், கடற்கரை சாலை சர்வீஸ் ரோடு வழியாக கலங்கரை விளக்கம் மற்றும் சாந்தோம் செல்லலாம். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: