காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனசீலன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு 7 பேர் மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்குத் தென்கிழக்கு பகுதியில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு நான்கு பைபர் படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 20-க்கும் மேற்பட்டோர் படகை சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

பட்டாக்கத்தி, இரும்பு பைப் உள்ளிட்ட பொருட்களால் தாக்கியதில் மீனவர்கள் தனசீலன், மணியன், சதீஷ், மாதேஷ், ஐயப்பன், மணிபாலன், அபிலாஷ் ஆகிய ஏழு பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும், படகில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான திசை காட்டும் கருவி, செல்போன்கள், வலைகள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

படுகாயத்துடன் இன்று அதிகாலை கரை திரும்பிய 7 மீனவர்களும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் தனசேகரனுக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடற்கொள்ளையர்களால் காரைக்கால் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: