கர்நாடகா கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதித்த தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு

டெல்லி: கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதித்த தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். நீதிபதி ஹேம்நாத் குப்தா ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும், நீதிபதி சுதான்சு துலியா ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.  

கா்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடா்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்குச் சீருடையில் மட்டுமே மாணவ, மாணவிகள் வரவேண்டும், ஹிஜாப் அணிய கூடாது என்றும் கடந்த பிப். 5-ம் தேதி கர்நாடக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி மாணவிகள் உள்பட பலா் கர்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் சிலா் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுக்கள் மீதான வாத, பிரதிவாதங்கள் 10 நாள்கள் நடைபெற்ற நிலையில், செப்டம்பா் 22-ஆம் தேதி தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு தூலியா ஆகியோா் அடங்கிய அமா்வில் வழங்கப்பட்டது.

மூத்த நீதிபதி ஹேம்நாத் குப்தா ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும், நீதிபதி சுதான்சு துலியா ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யவேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.  இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால் இந்த வழக்கனது 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது.

ஹிஜாப்புக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதி ஹேமந்த் குப்தா நாளை ஓய்வு பெறுகிறார்.

Related Stories: