திருவொற்றியூரில் பரபரப்பு 10ம் வகுப்பு மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது: உறவுமுறை அண்ணனுக்கு போலீஸ் வலை

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு, ஆண் குழந்தை பிறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து, உறவுமுறை அண்ணனை வலைவீசி தேடி வருகின்றனர்.கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இந்நிலையில், கடலூர் பகுதியில் விவசாய பணிகள் நலிவுற்றதால், கடந்த 2 ஆண்டுக்கு முன் தம்பதியினர் ஒரு மகளுடன் திருவொற்றியூருக்கு குடிபெயர்ந்தனர். அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தனர்.

இவர்களின் 15 வயதான 2வது மகள், 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, மாணவியின் தாய் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவ வலி ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாணவியின் தாய் விசாரித்தபோது, அண்ணன் உறவுமுறை உள்ள சித்தியின் மகன் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.பின்னர், மாணவி மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், அவரது வயது, கணவன் குறித்து மருத்துவ ஊழியர்கள் விவரங்களை கேட்டனர். அப்போது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.

இதுகுறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஷீலாமேரி சம்பவ இடத்துக்கு வந்து, மாணவி மற்றும் பெற்றோரிடம் தீவிரமாக விசாரித்தார். அதில், மாணவிக்கு குழந்தை பிறந்ததற்கு, 19 வயதான உறவுமுறை அண்ணன் பாலியல் பலாத்காரம் செய்ததுதான் காரணம் என தெரியவந்தது. இதைதொடர்ந்து அவரது வீட்டுக்கு சென்று போலீசார் சோதனை செய்தபோது, அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. பின்னர், மகளிர் போலீசார் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான உறவுமுறை அண்ணனை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், குழந்தை பெற்ற சிறுமி 10 மாத கர்ப்பமாக இருந்தபோது பெற்றோருக்கும் பள்ளி ஆசிரியர்கள், சக மாணவ, மாணவிகளுக்கும் தெரியாமல் இருந்தது எப்படி என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மாணவி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: