சென்னை: பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு வெளிவரும் கார்த்தியின் படம் சர்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 21ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். ராசி கன்னா, சன்கி பாண்டே, லைலா, முனீஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். படம் தொடர்பாக கார்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஹாலிவுட் ஜேம்ஸ் பாண்ட் முதல் கமல்ஹாசனின் விக்ரம் வரை ஏராளமான உளவாளிகள் பற்றிய படம் வெளிவந்திருக்கிறது. அந்த வரிசையில் இதுவும் ஒரு உளவாளி பற்றிய கதைதான். ஆனால் உள்ளூர் உளவாளி பற்றியது. சமூக அக்கறை கொண்ட அந்த உளவாளி ஒரு முக்கிமான உளவு வேலைக்கு உலகம் முழுக்க பயணிக்கிற மாதிரியான கதை.