கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ரா. நினைவாக புதுப்பிக்கப்பட்ட இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: இடைசெவல் ஊராட்சியில் கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் திரு. கி.ரா. அவர்களின் நினைவாக பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.10.2022) தலைமைச் செயலகத்தில்,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், இடைசெவல் ஊராட்சியில், கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் திரு. கி. ராஜநாராயணன் அவர்களின் நினைவாக 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட அவர் பயின்ற இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கட்டடத்தை திறந்து வைத்தார். “கரிசல் இலக்கியத்தின்”, முன்னத்தி ஏர் கி.ரா. என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் இடைசெவல் என்ற கிராமத்தில், ஸ்ரீ கிருஷ்ண இராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது மகனாக 16.09.1922-ல் பிறந்தார். பேச்சுத் தமிழில் மண்மணம் மிக்க கதைகளைப் படைத்தளித்தவர்.

அவரது படைப்புகளில் இடம்பெற்ற கரிசல் நிலவியலும், வெள்ளந்தித் தனமும், பேரன்புமிக்க மக்களின் வாழ்க்கை முறையும் தனித்துவம் மிக்கவை. இந்த மண்ணின் உழைப்பாளிகள், விவசாயிகள், பிஞ்சுக்குழந்தைகள், கதவு மற்றும் நாற்காலிகள் கூட அவரின் கதை மாந்தர்களாக மாறி மாயம் நிகழ்த்தின.  1958  முதல்  2021 வரை இலக்கிய பணி செய்த கி.ரா. 1991-ம் ஆண்டு “சாகித்திய அகாடமி விருது” “கோபல்லபுரத்து மக்கள்” என்ற நாவலுக்காக வழங்கப்பட்டது. மேலும், 2016-17ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது திரு. கி.ராவிற்கு வழங்கப்பட்டது. தமிழ் எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்ட திரு. கி.ரா. அவர்கள் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 17-ம் நாள் தனது 99-ம் வயதில் புதுச்சேரியில்  இயற்கை எய்தினார்.

வட்டார பேச்சுவழக்கிற்கு தமிழ் இலக்கிய உலகில் உயரிய இடத்தைப் பெற்றுத்தந்த கி.ரா. கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார்.

எனவே “கி.ரா. புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அன்னார் பயின்ற இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியானது பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் 18.5.2021  அன்று அறிவித்தார்.

அதன்படி, 1946-ம் ஆண்டு கட்டப்பட்டு பல்வேறு கால சூழ்நிலைகளால் பொலிவிழந்த நிலையில் இருந்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கட்டடத்தை, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வெள்ளை சுண்ணாம்பு, ஆற்று மணல், கருப்பட்டி, கடுக்காய், முட்டை கலவை போன்றவற்றின் மூலம் சுவர் பூச்சு செய்யப்பட்டு, பழமை மாறாமல் மெருகேற்றப்பட்டு, புதிய ஓடுகள், தேக்கு ஜன்னல்கள், பனங்கை சட்டங்கள் பொருத்தப்பட்டு, பழைய பள்ளிக் கட்டடம் புதுப்பிக்கப்பட்டது. தன் வாழ்நாளை மண்சார்ந்த காவியங்களுக்கு உரித்தாக்கி எளிமையாக வாழ்ந்த கி.ரா. அவர்கள் பயின்ற பள்ளி, மண்ணின் வாசனை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது நினைவுகள் அனைத்து தரப்பினரும் போற்றத்தக்கதாக அமையும்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை கேஆர்.பெரியகருப்பன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர்  முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மரு. தாரேஸ் அஹமது, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: