2 ஆண்டுகளில் 181 பேர் உயிரிழப்பு; வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்: மீறினால் ரூ.1,000 அபராதம், ஓட்டுநர் உரிமம் ரத்து

புதுச்சேரி: புதுவையில் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மற்றும் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். தவறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதுடன் 3 மாதத்துக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முறையற்ற வகையில் மோட்டார் வாகனம் இயக்குவதால் தினமும் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. 2019 முதல் 2021 வரை புதுவையில் 3,410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் புதுச்சேரியில் நான்கு பேரும் மற்றும் காரைக்காலில் ஒரு சிறுவனும் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்லும் பொழுது சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர்.

 

இரு சக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி உள்ளது. இவ்வாறு பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் எனப்படும் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்தல் அவசியம். தலைக்கவசம் அணிந்து பயணம் செய்வது வாகன விபத்தில் தலைக்கு காயம் ஏற்படுவதை 80 சதவீதம் தடுக்கிறது. கடந்த 2021 மற்றும் 2022 செப்டம்பர் வரையில் மட்டும் தலைக்கவசம் அணியாததன் காரணமாக 181 பேர் இறந்துள்ளனர்.

 

இருசக்கர வாகனம் ஓட்டுவோர் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து அலுவலகங்களுக்கு இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் பொழுது, அத்துடன் தரமான தலைக்கவசத்தினையும் விற்பனை செய்யும் முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது கைபேசி உபயோகிப்பது நமது புலன்களின் திறனை 50 சதவீதம் குறைக்கும் என்பதால், எந்த வாகனம் ஓட்டும் பொழுதும் கைபேசி பேசுவதை தவிர்க்க வேண்டும்.வாகனம் ஓட்டும்போது கைபேசியில் பேசுவோருக்கும், தலைக்கவசம் அணியாது இரு சக்கர வாகனம் ஒட்டுவோர் மற்றும் பயணிப்போருக்கும் முதல் முறை ரூ.1,000 அபராதம் மட்டுமன்றி 3 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கைபேசியில் பேசாமல் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவோர் வாகன விபத்தினை தவிர்க்கலாம். சாலை விதிகளை கடைபிடித்து விபத்தினை தவிர்ப்போம்.

 

எனவே, பொதுமக்கள் அனைவரும் தகுதியான தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஒட்டுவது, அதிவேகமாக ஓட்டுவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது, அலைபேசியில் (மொபைல்) பேசிக்கொண்டு ஓட்டுவது, தவறான திசையில் ஓட்டுவது, இரண்டு நபர்களுக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் செல்லாமல் சாலை விபத்துகளை தவிர்க்குமாறு போக்குவரத்துத்துறை அறிவுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: